ப*ம் ஸர்வஸௌபா*க்யதாயினீ
அன்னையே, எமது மெய்யான வளம் நீயே. அக்கறைகொண்ட உன் வழிகாட்டலின்படி வாழ்ந்து எமது திறன்களையும், அறிவையும், ஞானத்தையும் வளர்த்துக்கொண்டுள்ளோம். எமது வழிகாட்டியென ஞானமே இருக்குமென்றால் அதைவிடச் சிறந்த நல்லூழ் என்ன இருக்க முடியும்? இக்கணத்தில் நாங்கள் மகிழ்கிறோம். அது, ஆன்மாவின் ஆழ் அமைதியைக் கண்டடைந்தவனின் பாடலைக் கேட்பதுபோலுள்ளது. எமது கடந்தகாலம் உனது சூரியனுடன் வாழ்வது போன்றது என்றால், எமது நிகழ்காலம் உனது நிலவுடன் வாழ்வது போன்றது. கடந்தகாலமும் நிகழ்காலமும் இறுதியில் எதிர்காலத்தோடு நிறைவடையவேண்டும். எதிர்காலம் என்பது ஏதோ புறவயமான ஒரு கூறன்று. அகத்தில் தூண்டப்படும் நெருப்பு போன்றது அது. எம்முள் என்றும் எரியும் ஏற்றப்படாத விளக்கென இருந்தபடி, வாழ்வதற்கான விழைவையும், நாங்கள் செல்வதற்கான பாதையையும், பாதையை காட்டித்தரும் ஒளியையும், இலக்கையும் நீ எமக்களிக்கிறாய்.
சூரியன், சந்திரன், அக்னி என மும்முறை வாழ்த்தப்பட்ட வளமென நீ இருக்கிறாய். எம்மை முழுமையாக அரவணைத்து பாதுகாக்கிறாய். எமது கடந்தகாலம் வாழ்த்தப்பட்டதாக இருந்தது. நிகழ்காலம் வாழ்த்தப்பட்டதாய் இருக்கிறது. எதிர்காலமோ என்றென்றைக்குமாக வாழ்த்தப்பட்டதாக இருக்கும். உனது வலது விழி சூரியனை குறிப்பது, இடது விழி சந்திரனை. மைய விழி, உனது விழைவை நிறைவேற்ற எம்மை எப்போதும் வழிநடத்தும் ஞானத் தீயை குறிக்கிறது. சூரியனும் சந்திரனும் பகலையும் இரவையும் குறிப்பன. பகலில் நாங்கள் படைக்க வேண்டும் என நீ நினைப்பவை எல்லாம், எமது ஐந்து புலன்களையும் கொண்டு, சூரிய ஒளியில் காணப்பட வேண்டியவை. எமது கண்களில் படும் நுணுக்கங்களையெல்லாம் வழிகாட்டலாகக் கொண்டு எமது கைத்திறத்தை நாங்கள் பயன்படுத்தவேண்டும் என எதிர்பார்க்கிறாய். மூத்தோர் சொல்லை பிறழாது கைக்கொண்டு, எம் பண்பாட்டை வார்த்தெடுத்த முன்னோடிகள் சென்ற தீமையற்ற வழியில் நாங்கள் நடக்க வேண்டும். ஒரு நாளில் எய்தப்பட்ட அனைத்தும் மறுநாளைக்கென பாதுகாக்கப்படுகிறது. எமது செயல்களை ஆற்றவும், விரும்பத்தக்க இலக்குகளை (காம்ய கர்மம்) அடையவும் நீ எமக்கு உதவுகிறாய்.
அன்னையின் அரவணைப்பில் உறங்கப்போகும் குழந்தையைப் போல, இரவு முழுவதும் நாங்கள் உன்னுடன் இருப்போம் என்பதை நாங்களறிவோம். நிலவொளிக் கனவுகளென உனது தேவதைக் கதைகள் எம்மை வந்தடைகின்றன. பகலின் கடும் உழைப்பு இப்போது தேவையில்லை. நிலவெரிகையில் நீ கறாராக இருப்பதில்லை. செலுத்த வேண்டிய கடன்கள் ஏதும் இல்லை. கடப்பாடுகள் ஏதும் இல்லை. எவருடனும் எந்த ஒப்பந்தமும் இல்லை. எம்மேல் வீசும் நிலவொளியைப் போலவே எமது வாழ்வும் மிக லேசாகிவிடுகிறது. உறக்கம் பிடிக்கவில்லையெனில் கற்பனைகள் எம்முடன் விளையாடத் துவங்குகின்றன. கேட்பதற்கு இசை இருக்கிறது. நிலவிரவுகளுக்கென ஒரு இசைப்பாடல் தன்மை உள்ளது. விளையாடித் திரியும் தேவதைகளைப் போல் நண்பர்களது கரம் பற்றி, காதலர் கைபிடித்து வெட்டவெளியில் நாங்கள் நடனமாடலாம். குழந்தைகளைப் போல, மொத்த உலகையும் ஒரு பொம்மையென வைத்து விளையாடலாம். மங்கலொளி எம்மை ஆன்மாவின் அமைதிக்கு இட்டுச் செல்கிறது. அனைத்து இருமைகளையும் கடந்து தன்முனைப்பையும் பற்றுதல்களையும் துறக்கிறோம். நீ, நான், பிறர் என்ற அனைத்து வேறுபாடுகளையும் மறந்து, கோழி கூவும் வரை ஆழுற்றக்கத்தில் ஆழ்கிறோம். நாங்கள் உறங்குகையில் எமது அமைதியைக் கொண்டு எமது உடல்களில் ஊட்டத்தை நிறைக்கிறாய், எமது உள ஆற்றலை மீட்டளிக்கிறாய். மீண்டும் பகலவன் எழுகையில் வலுவான ஆரோக்கியமான உடல்களுடனும் உன் கட்டளைகளை நிறைவேற்றும் துணிவுடனும் ஆர்வத்துடனும் எமது வழமையான செயல்களை ஆற்ற வைக்கிறாய்.
இப்படியாக, எமது கழி நிகழ் எதிர்வெனும் அனைத்தும் பேணப்படுகின்றன. சூரிய ஒளியுடனான பகல்களும், இரவொளி நிரம்பிய இரவுகளும், அமைதியான மங்கலொளி கொண்ட அந்திகளும் மாறி மாறி சுழற்சியென நிகழ்ந்து எமது நனவை புத்துயிர்ப்பு கொள்ளச் செய்து எம் வாழ்வை எப்போது புதியதென வைத்திருக்கின்றன. வாழ்வதற்கென புதிய விழுமியம் ஒன்று எப்போதும் இருந்துகொண்டே இருக்கிறது; வியப்பதற்கு புதிய அதிசயம் ஒன்றும் காத்திருக்கிறது. உனது விருப்பம் நிறைவேறும். எமது விருப்பை உன்னுடையதோடு அடையாளம் காண, தடையின்றி “எமது விருப்பம் நிறைவேறும்” என நாங்கள் உறுதிகொள்ள எமக்கு உதவுவாயாக!
|| பம் ஸர்வஸௌபாக்யதாயினீ ||