ஸ்வதேஹோத்பூ*தாபி*ர்க்*ருணிபி*ரணிமாத்யாபி*ரபி*த:
நிஷேவ்யே நித்யே த்வாமஹமிதி ஸதா பா*வயதி ய:
கிமாஶ்சர்யம் தஸ்ய த்ரிநயனஸம்ருத்தி*ம் த்ருணயதோ
மஹாஸம்வர்தாக்னிர்விரசயதி நீராஜனவிதி*ம்
பாடல் – 30
தன்னுடலில் தோன்றும்
கட்புலனாகா அணிமா போன்ற
அக ஆற்றல்களையே
பரிவாரங்களெனக்கொண்டவளே
நிலைபேறான உன்னை
‘நீயே நான்’ என எப்போதும் தியானிப்பவர்
முக்கண்ணனின் நன்மைகளையே
பொருட்டெனக் கொள்வதில்லை
அத்தைகையோருக்கு
ஊழி நெருப்பே ஒளியூட்டாகிறது
**
நசிகேதஸின் தந்தை சினம் கொண்டு, மகனை காலனிடம் அளித்துவிடுவதாக மிரட்டினான். அந்த மிரட்டல் இளையவனான நசிகேதஸின் ஆர்வத்தை தூண்டியது. தப்பியோடுவதற்கு பதிலாக அவனாகவே காலனின் இருப்பிடத்திற்கு வலிய சென்று, அவனிடமிருந்தே மரணத்தின் ரகசியத்தை அறிய எண்ணினான். அவன் தன் தேடலை கைவிட்டு, அரசணிகளும், அழகியர் அந்தப்புரமும் என ஒருவனை கவரக்கூடிய அனைத்து உலகாயதமான செல்வங்களிலும் திளைத்திருக்கும்படி செய்ய எண்ணினான் யமன். நசிகேதஸோ, செல்வங்களைவிட மெய்யறிதலையே பெரிதென எண்ணினான். யேசுவின் முன்பாக உலகீயக் கவர்ச்சிகளை அணிவகுக்கச் செய்தான் சாத்தான். ‘நானே நான்’ என்று திண்ணமாக நம்பிய யேசு அவற்றிற்கு எந்த மதிப்பும் அளிக்கவில்லை. கௌதமன் புத்தனாக உயிர்த்தெழுந்த கணம், ரூபாங்கம் என்னும் பத்து மாய உருக் காட்சிகளையும் அரூபாங்கம் என்னும் பத்து கருத்துக் கவர்ச்சிகளையும் கொண்டு அவன் முன் தோன்றினான் மாரன். மாரனின் மடமையைக் கண்டு புன்னகைத்தான் அருளே வடிவான இறைவன்.
தன்னுடைய தனிமையை நோக்கி செல்கின்ற யோகி, தன்னை எவருக்கும் நிரூபிக்கவேண்டியதில்லை. அதனால்தான், ஸித்திகள் எனப்படும் எட்டு அக ஆற்றல்களை விலக்குகிறார் பதஞ்சலி. ‘நானே நான்’ என்ற திடநம்பிக்கை மட்டுமே தேவைப்படுகிறது. புத்தனுக்கும் அறிவற்றவனுக்கும் என்ன வேறுபாடு என்று ஒரு ஜென் ஆசானை கேட்டபோது, ‘அறிவற்றவன் ஒரு மரத்தை மரமென அறிகிறான், புத்தன் ஒரு மரத்தை மரமென அறிகிறான்’ என்றார் அவர். உண்மையில் எந்த வேறுபாடும் இல்லைதான். ஆனால் ‘நான்’ என்பதற்கும் ‘நானே நான்’ என்பதற்கும் இடையே பெரிய வேறுபாடு உள்ளது. குழப்பத்தை தவிர்க்க, ‘நிலையானவளே, நித்யா, நீயே நான்’ என்ற தியானம் இப்பாடலில் பரிந்துரைக்கப்படுகிறது. ‘ஔம்’ எனும் மந்திரம் அமைக்கப்பட்ட யந்திரம் இந்த தியானத்திற்கானது.