மொழியும் பிரபஞ்சமும் – 2

வேதத்தினூடாக அடையும் நன்மைகள் உலகியல் சார்ந்தவை.  அவற்றை சம்சாரம் என்று கூறுகிறோம்.  இவை சார்பு நிலையானவை.  இவற்றையெல்லாம் வார்த்தைகளினூடாக மானுடன் அறிகிறான்.  ஆனால் வார்த்தையில் அடங்கியுள்ள வேறு ஒரு ரகசியம் உண்டு.  அதை நாதம் எனலாம்.  மூதாதையர் சொல்லை இணைத்து செய்யுள் உருவாக்கினர்.  வேத மந்திரங்கள் நான்கு வரிகளினாலானவை.  அவற்றை இரண்டிரண்டாகப் பிரித்தால் அவை நான்கு நான்கு எழுத்துக்களாகும்.  அதை ‘அனுஷ்டுப்பு சந்தம்’ என்பர்.  சொல் இவ்வாறு பற்பல சந்தங்களில் நிறுவப்பட்டுள்ளது.  சந்தமொன்றில் நிறுவப்படாத சொல் இல்லை.  இந்த ஒலியொழுங்கு மூலமே சொல் முழுமையடைய முடியும்.  சொல்லுக்கு அது பரவச நிலையை (sublime) அளிக்கிறது.  அதனூடாகவே நாம் மொழியின் உச்சங்களை அடைய முடியும்.

உலகியலின் மூலம் உருவாகும் சிறப்பம்சங்கள் ஏதுமில்லாத மெய்மையின் சாரத்தில் நம் பிரக்ஞை திரும்பிச் சென்று அங்கு தங்கி நிற்பதை பிரக்ஞையின் முழுமை எனலாம்.  அப்போது வேறுபாடுகளின் மூலம் கற்பிதம் செய்யப்பட்டுள்ள இவ்வுலகிலிருந்து மீண்டு ஒருமையின் உலகினை அடைகிறோம்.  அவ்வாறு அடைபவனை யோகாரூடன் என்று தியான மரபு குறிப்பிடுகிறது (புத்தர் அமர்ந்திருக்கும் தோற்றமே யோகாரூடம்.  அது யோகாரூட புத்தன்) அந்நிலையில் முக்குண விளையாட்டு அவனைத் தொடுவதில்லை.  எனவே எதற்கும் சிறப்பியல்புகள் இல்லை.  எனவே அவனுக்கு வெளியுலகாக விரிந்துள்ள பிரம்மாண்டம் இல்லை.  (அதாவது பாஸம், பாஸ்யம் என்ற இருவகை மயக்கங்களும் இல்லை.  பாஸம் புற உலகத்தோற்றம்.  பாஸ்யம் அகத்தில் அதன் பிரதிபலிப்பு – மொழிபெயர்ப்பாளர்)  அதை கேவலம் (முதல் நிலை எளிமை) என்று குறிப்பிடுகிறோம்.  அந்நிலையே கைவல்யம்.

இந்த உயிரே

பிராமணஸ்பதியும் ஆகிறது

சொல்லே பிரம்மம்

அதற்கு இவன் அதிபன்

எனவே இவன்

பிராமணஸ்பதியும் ஆகிறான்

நாம் ஒன்றை அறிய மூன்றுவிதமான திண்ணங்கள் தேவை என்று மேற்கு மரபு வகுக்கிறது.  அறிபடு பொருள் அல்லது ஆய்படு பொருள் முதல் திண்ணம்.  இதை அறிவுக் கூறு (Epistime) என்றும் இதை வகுத்துக் கொள்வதை அறிவுக்கூறியல் (Epistomology) என்றும் கூறுகிறார்கள்.  அவ்வறிதலினூடாக நாம் அடைவது என்ன, அது எதற்குப் பயன்படும் என்பது சார மதிப்பீடு (axiom) எனப்படும்.  அந்த ஆய்வுமுறை மதிப்பீட்டியல் அல்லது சாராம்சவியல் (axiology).  படிப்படியாகத் தொகுத்தும் பகுத்தும் தியானித்தும் அறியும் முறைமை (metodology) மூன்றாவது திண்ணம்.  இவ்வுபநிடத வரிகளில் சொல்லும் பிரபஞ்சமும் ஆய்படு பொருளாகவும் அவற்றின் உறவை அறிவதனூடாக நாம் அறியும் ஒருமைநிலை சாரமதிப்பீடாகவும் இருக்கிறது.  படிப்படியாக ஆய்வுமுறை விரிவடைந்து செல்கிறது.

சொல் ஒரு வாகனம்.  அது ஒலியலையில் நகரும்.  ஒலியலை வாயுவில் நகர்வது.  வாயுவே உயிர்களில் பிராணன்.  நாம் கேட்பது உயிரின் அலைகளை.  உயிரின் சலனமே சொற்களாக காற்றில் நகர்கிறது.  எல்லா அனுபவங்களிலும் சம்பந்தப்பட்ட புலன்கள் ஒன்றாக இணைந்து செயலாற்றுவதைக் காணலாம்.  உயிர் புலன்களை ஆள்கிறது.  புலன்களினூடாக அது தன்னை வெளியில் சாத்தியப்படுத்திக் கொள்கிறது.  ஒரு காக்கை நம்முன் வந்தமர்ந்து ‘கா’ எனும்போது காதால் கேட்டு கண்ணால் கண்டு அதை அறிகிறோம்.  மனதில் அதன் படிமம் ஒன்று எஞ்சுகிறது.  அது காகமெனும் புலனறிதலின் தொகுப்பாகும்.  காகம் பறந்துபோன பிற்பாடு மனதில் அந்த பிம்பம் எஞ்சுகிறது.  அந்த பிம்பத்திற்குத்தான் நாம் ஒலியடையாளம் தருகிறோம்.  அந்தப் பெயர் பிறகு காகத்தின் பதிலியாகிறது.  அப்பெயரே காகமெனும் அனுபவத்தைத் தரமுடியும்.  இவ்வாறு உள்ளூர ஒரு பிரதியுலகம் உருவாகிறது.  அகப்படிமங்களினாலான இவ்வுலகம் மரபில் ‘பிரதிபா’ எனப்படுகிறது.  அது பொருண்மையற்றது.  ஆனால் பொருளின் அனுபவத்தைத் தருகிறது.  உடலால் நாமறியும் அனுபவம் பிரத்யம்.  அவ்வனுபவத்தை நாம் அறியும் முன்பே அறியப்பட்டு பிரதிபாவில் தொகுக்கப்பட்டுள்ள முன்னறிதல் தேவையாகிறது.  (இதை பெளத்த மரபிலிருந்து வேதாந்த மரபு பெற்றுக் கொண்டது.  அறிதல் என்பது பிரத்யம்.  முன்னறிதல் சமாந்தர பூர்வ பிரத்யம்.  முன்னறிதல் இன்றி அறிதல் சாத்தியமல்ல – மொழிபெயர்ப்பாளர்)  இவ்வாறு நிகழும் அறிதலெனும் நிகழ்வை நாம் கூர்ந்து கவனிப்பது அவசியம்.

நாமறியும் பொருளுக்குரிய விசேஷத் தன்மையை (அல்லது சிறப்பியல்புகளை) மட்டுமே சார்ந்து பிரதிபா உருவாகிறது.  அதாவது அறிதல் என்பதே சாராம்சப்படுத்தி அறிதல்தான்.  சொற்களினூடாக நாம் உண்மையில் குறிப்பிடுவது பிரதிபாவையே (உதாரணமாக பசு என நாம் குறிப்பிடுவது அம்மிருகத்தையல்ல.  அதை உணர்வு ரீதியாகவும் பயன்பாட்டு ரீதியாகவும் நாம் சாராம்சப்படுத்தி வைத்திருக்கும் உள்ளறிவையேயாகும்.  பசு என்ற அந்தரங்கப் படிமம் குறிப்பிடப்படுகிறது.  பசு என்ற கலாசாரப் படிமம் தொடர்புறுத்தப்படுகிறது என்று நவீன குறியியல் கூறும் பசுவின் பல்லாயிரம் இயல்புகள் வெளியே உள்ளன – மொழிபெயர்ப்பாளர்) இந்த சாராம்சம் தனித்துத் தன்னை அறிய வைத்துக் கொள்ள் இயலாது.  எனவே இணையான பிற சாராம்சங்களுடன் அதைத் தொடர்புபடுத்துகிறோம்.  ஓடும் நீரில் ஆணியடிக்க முடியுமா?  இன்னொரு திரவத்தையே கலக்க முடியும்.  அதாவது பொதுத்தன்மை உடைய பிற அறிதல்களுடன் இணைத்துதான் ஒரு தனியறிதலை நாம் புரிந்து கொள்ளவும் புரியவைக்கவும் முடியும்.  இவ்வாறு பிரதிபா இயங்குவதில் ஒரு நியதி உள்ளது.  அதுவே மொழியின் நியதி ஆகிறது.  (ஒவ்வொரு சொல்லும் பிற சொற்கள் அனைத்தாலும்தான் அர்த்தப்படுத்தப்படுகிறது என நவீன மொழியியல் குறிப்பிடுகிறது – மொழிபெயர்ப்பாளர்)

மொழி பலவகைப்பட்டது.  நாவால் குறிப்பிடப்படுவது மட்டுமல்ல; குறியீடுகளினால் கூறப்படுவதும் மொழியே.  ஓவியம் நடனம் குறிகள் முதலியவையும் மொழிகளே.  நடராஜ நடனத்தில் சிவன் தன் உடலையே மொழியாக்கி நிற்கிறான்.  108 தாண்டவ முறைகள் உள்ளன என்பது சாஸ்திரம்.  மொழியின் பரிமாணங்களைக் கூறி முடிக்க முடியாது.  மொழியினூடாக இயங்கும் நாதம் இன்னொரு மொழி.  ஒரே சமயத்தில் பல்வேறு மொழியமைப்புகள் சேர்ந்து இயங்குகின்றன.  இவற்றின் இசைவைத் தீர்மானிப்பது எது?  அதை ஸ்தாபிக்கும் ஞானம் என ஒன்றை உருவகித்து அதற்கு ‘பிராமணஸ்பதி’ என்று உபநிடதம் பெயரிடுகிறது.  உயிர்கள் பிறப்பதற்கு முன்பு கருவறையில் இருந்தபடியே தன் உடலை இயற்கையிலிருந்து உருவாக்கியெடுத்துக் கொள்கின்றன.  அதுபோல நாம் கூறும் சொற்கள் ஒலி வடிவமோ வரி வடிவமோ பெற்று வெளி வருவதற்கு முன்னரே உள்ளூர கரு வடிவில் உள்ளன.  வெளிமொழியை உருவாக்கும் விளைநிலமாக இந்த கருப்பரப்பு நம்முன் உள்ளது.  சொல் வெளியே இருக்கிறது.  குறிப்பு உள்ளே உள்ளது.  இவையிரண்டும் இணையும் தருணத்தில் அடையாளமாக்குகையில் எழுத்துகள் உருவாகின்றன.  அதைப் பேசலாம் – உள்ளூர வைத்திருந்து அதனூடாக பிரக்ஞையை பிரவாகமெடுக்கச் செய்யலாம்.  வெளிவரும் ஒலியை நியதிகளில் நிறுத்தவும், உச்சப்படுத்திக் காட்டவும், மெளனப்படுத்திக் காட்டவும் தேவை எழுகிறது.  அதற்கு இலக்கணமும் ஒலியிலக்கணமும் தேவையாகிறது (வியாகரணம், சந்தஸ் சாஸ்திரம்).

ஒருவர் தன்னைப் பிறருக்கு உணர்த்தும் மொழியானது தருணம் சார்ந்தும் பொதுச் சூழல் சார்ந்தும் தர்க்கத் தன்மை (logical relevancy) உடையதாக உள்ளது.  இந்தத் தர்க்கத்தை உதறிவிட்டு மனம் காரிய காரண உறவுடன் ஒரு கருத்திலிருந்து அடுத்ததற்கு நகர்ந்து ஓர் இலக்கு நோக்கிச் செல்வது சிந்தனை.  மொழியின் புறவய இயக்கத்திலிருந்து விலகி அடுத்த தளத்திற்கு நகர்ந்து சொற்களின் குறிப்புத் தளங்களை அறிய முயல்வது மனனம்.  மனனத்தின் இறுதியில் அறிபவனுக்கும் அறிபடு பொருளுக்கும் இடையேயான இடைவெளி இல்லாமலிருக்கிறது.  லயம் கைகூடுகிறது.  இதுவே தியானம்.  தியானம் என்பது ஒரு பயிற்சி அல்ல  மாறாக பயிற்சிகளின் இறுதியில் கைகூடும் முழுமை நிலையாகும்.

இந்த பிராணனே ஸாமம்

ஸா என்பது சொல்

ஆமம் மூச்சு

ஸா என்பதும் ஆமம் என்பதும்

இணைந்ததே ஸாமம்

எதனால் இது

கரையானுக்கு சமானமாகவும்

கொசுவுக்கு சமானமாகவும்

யானைக்கு சமானமாகவும்

மூவுலகுக்கு சமானமாகவும்

இவையனைத்துடனும் இணைந்தும்

உள்ளதோ அதுவே சாமத்துவம்

யார் இவ்வாறு

இதை அறிகிறானோ

அவனே சாமத்தின் முழுமையையும்

சாமத்தின் தனியுலகையும்

அடைகிறான்

பிராணனே சாமம் என்கிறது உபநிடதம்.  பிராணனும் சொல்லும் இரண்டறக் கலந்து உருவாகும் தருணமே சாமம்.  அது மூவுலகங்களுக்கும் அதில் உள்ள ஒவ்வொரு துளிக்கும் சமமானது.  சமம் என்பதால் அது சாமம்.  இந்த சமானத்தன்மையை உணர்பவரே சாமத்தை அறிகிறார்.

அக வார்த்தையை புறவார்த்தையாக ஆக்குவது.  பிராணனை ஆணாகவும் கூறுவதுண்டு.  அவர்கள் இணையும்போது பிறப்பதே மொழி.  பிராணன் வார்த்தையின் கருவில் விழுந்து முளைத்தெழுகிறது.  அந்தக் கூடலில் பிரிவினையுணர்வுக்கு இடமில்லை.  சாமம் என்னும் இது பிரபஞ்சத்திற்கு சமமானது.  அதில் உள்ள ஓர் அணுவிற்கும் சமமானது.  இந்த பேதமின்மையையே ரிஷிகள் ஆதிமகஸ் என்றார்கள் (அறிவும் அறியும் பொருளும் அறிபவனும் ஓர் ஆதிமகஸ் மட்டுமே – நாராயண குரு – ஆத்மோபதேச சதகம்)  இந்த ஒருமையில் உள்ள எந்த ஒரு துளியை எடுத்துக்கொண்டாலும் அது முடிவற்ற ஆனந்தத்தைத் தன்னுள் கொண்ட ஒரு முழுமையாகும்.  அதற்கு முடிவற்ற தனித்தன்மைகள் உண்டு.  அவற்றைப் பிரித்தறிந்து வியந்து துதிக்கும்போது பிரக்ஞை ரிக் ஆகும்.  அவற்றுடன் பரிபூரண சமானத் தன்மையை உணர்கையில் அப்பிரக்ஞை சாமம் ஆகிறது.  ரிக்கும் சாமமும் ஒன்றையொன்று பூரணப்படுத்துகின்றன.  இது எவ்வாறு மொழியும் அதிலுள்ள ஒவ்வொரு சொல்லும் பிரம்மாண்ட பதியாகிறது என்பதை விளக்குகிறது.

Leave a comment