என்னுடைய மரணத்தின்போது நான் வலியுறுத்திச் சொல்லும் முதல் விஷயம், எந்தவித மந்திர உச்சாடனமோ அல்லது வேறு வகையான சூழலுக்குக் கேடு விளைவிக்கும் கூச்சலோ இருக்கக்கூடாது என்பதுதான். மக்கள் அவரவர் வேலையைப் பார்த்துக்கொண்டிருக்க வேண்டும். சடலத்தை அப்படியே கிடக்கவிட்டால் கொஞ்ச நேரத்தில் நாற்றமடிக்க ஆரம்பித்துவிடும். எனவே, அதை உரிய வகையில் அப்புறப்படுத்த வேண்டும். இதில் பலமுறைகளைப் பற்றி நான் யோசித்து வருகிறேன். அதை எரித்துவிடுவது ஒருவகை. ஆனால், ‘நான் இறந்துவிடும்போது நான் முழுமையாக இறந்திருக்கிறேனா?’ என்ற கேள்வி என் முன்னால் தோன்றுகிறது. என்னில் ஒரு பகுதி இன்னும் உயிரோடிருக்கிறது. உதாரணமாக, என்னுடைய எலும்புகள். அப்படி என்றால், எரிப்பது சோகமயமானது. புதை குழிக்குள், எனக்குக் கொஞ்சம் அவகாசம் கொடுத்தால், ஒவ்வொரு மாதமாக என்னுடைய மரண நடைமுறையைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தொடர்வேன். ஆனால், அதன்பிறகு புழுக்கள் வரும்; என்னுடைய வாயிலும் குடல்களிலும் புழுக்கள் இருப்பதை யோசிப்பதில் எனக்கு விருப்பமில்லை. அதில் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால், என்னால் அதை உணரமுடியாது. அந்த வகையிலாவது நான் உயிர்த்தன்மைக்கு என்னுடைய பங்கை அளிப்பேன். என்னுடைய உடலைத் தின்னும் 10,000 புழுக்கள் சாந்தோக்ய உபநிஷத்தும் பிறவும் சேகரித்து வைக்கப்பட்டிருக்கும் என்னுடைய மூளைப்பகுதிக்கு வந்து சேர்வதை யோசித்துப் பாருங்கள். ஒரு வேளை அந்தப் புழுக்கள் விவேகமானவையாக மாறலாம். என்னுடைய மூளையிலிருந்து ஏதாவது இயற்கை மருந்து தயாரிக்கப்படலாம். அல்லது ரொட்டியின் மீது தடவப்படும் ‘ஜாம்’ போன்ற ஒன்று தயாரிக்கப்படலாம். ஆனால், சட்டம் இம்மாதிரியான விஷயங்களை அனுமதிக்காது; ஏனென்றால் மக்கள் முட்டாள்தனமானவர்கள். இந்தச் சூழ்நிலைகளில் ஓர் எளிமையான அடக்கத்தையே நான் கோருகிறேன். ஆனால், ஆன்மா என்று அழைக்கப்படுவது ஒன்று இருந்து அதுவும் என்னுடன் புதைகுழிக்குள் வந்தால் அது தப்பிக்க ஒரு சுலபமான வழி இருக்க வேண்டும். மேலும், சன்னியாசிகள் பெரும்பாலும் உட்கார்ந்த நிலையிலேயே புதைக்கப்படுகிறார்கள். எனக்கு அது பிடிக்கவில்லை. இப்போதே எனக்கு முதுகு வலி. ஒருக்களித்து படுத்துக்கொள்ள விரும்புகிறேன். ஒரு சிறு தலையணை மேலும் செளகரியத்தைக் கொடுக்கும். ஒரு சிறு குறிப்பேடும் ஒரு பென்சிலும் அங்கு வைக்கப்பட வேண்டும்; நான் எதிர்கொள்ள நேரும் சுவாரஸ்யமான பூதங்களை, நான் வரைய அவை உதவியாயிருக்கும். இந்த மாதிரியான சிந்தனைதான் ‘பிரமிடுகள்’ கட்டப்படுவதற்கு இட்டுச் சென்றிருக்கும். மரணம் விவாதிக்கப்படும்போது, மனித மனத்தில் இருக்கும் ஓர் ஆதி தொன்மம் தூண்டப்படுகிறது.
மரணம் தொடர்பான தத்துவம் மற்றும் பிறவிகள், விதி சார்ந்த உள்ளார்ந்த விஷயங்களுக்கு இன்னும் கொஞ்சம் ஆழமாகப் போக விரும்புகிறேன். மரணத்தின் இரண்டு அம்சங்களை வேறுபடுத்தி ஆராய வேண்டியுள்ளது. ஒன்று பிறவி மற்றும் விதி தொடர்பானது; மற்றொன்று தத்துவ ரீதியானது. முன்னதைப் பொறுத்தவரை, இந்த பெளதீக பூமி மட்டுமே இந்தப் படைப்பின் ஒரே எல்லை ஆகாது. இந்தியக் கருத்தியல்படி, மேலே ஏழு உலகங்களும், கீழே ஏழு உலகங்களும் உள்ளன. இறப்புக்குப் பின் இந்த முழு அமைப்புமுறையிலிருந்து நாம் விலகுவதில்லை. இந்த பெளதீக உலகில் மட்டும்தான் நாம் பெளதீக உடலைக் கொண்டிருக்கிறோம். இந்த உடல் பஞ்ச பூதங்களால் ஆனது. நிலம், நீர், நெருப்பு, காற்று மற்றும் ஆகாயம். மரணத்தின்போது இந்த ஐந்தும் சிதைவுற்று மறைகின்றன. நிலம், நிலத்திற்குப் போய்ச் சேருகிறது; நீர், நீருக்குப் போய்ச் சேருகிறது; மற்றவையும் இப்படியே.
பெளதீக இறப்பை ‘முதல் இறப்பு’ என்று சொல்லலாம். பெற்றோராக இருக்கும் எவரும் தங்களுடைய ஒரு சிறு பகுதியைத் தங்களுடைய உயிர்வீரியம் மூலம் தங்களுடைய மகன்களுக்கும், மகள்களுக்கும் அளித்திருக்கிறார்கள். ஒருவருடைய இறப்புக்குப் பிறகும்கூட அவருடைய ஒரு பகுதி, அவருடைய உற்றார் உறவினர்களில் வாழ்கிறது. ஒருவருடைய குழந்தைகள் சந்ததியை உண்டாக்காமல் இறந்துவிட்டால், அதை ‘இரண்டாம் இறப்பு’ என்று கருதலாம். ‘மூன்றாம் இறப்பு’ ஒருவருடைய புகழ் உலகில் நிகழ்கிறது. நிறையப்பேர் அவர்களுடைய புகழால் வாழ்கிறார்கள், ஒருவருடைய புகழ் சில காலம் வாழ்கிறது. ஆரம்பத்தில் மக்கள் உணர்ச்சிப் பெருக்குடன் நினைவுகூரப்படுகிறார்கள்; அந்தச் சமத்தில் அந்த நபர் அடுத்த உலகிற்கு விடுவிக்கப்படுகிறார்; அங்கு அவர், மக்கள் மீது ஒரு நனவிலி மனோவியல் தாக்கமாக நீடிக்கிறார்.
இது ஒருவகையான ஊடாடி வரும் தாக்கமாக இருக்கலாம். இந்தியச் சிந்தனை முறைப்படி, இதற்கு அடுத்த பரப்பாக உள்ளத்தில் உலகின் பாதுகாவலராக நீங்கள் ஆகிறீர்கள். இங்கு உங்களுக்கென்று சொந்தமாக எந்த ஆளுமையும் கிடையாது. இந்த மட்டத்திலுள்ள சக்திகளின் பங்களிப்பால் இந்தப் பிரபஞ்சத்தின் தாளலயம் உயிர்ப்புடன் தொடர்கிறது. அதற்கு அப்பால் நீங்கள் ஒரு சட்டத்தின் வெறும் ஒரு பகுதிதான். பிரபஞ்சத்தின் கணித, உடலியல் மற்றும் நீதி நெறிச்சட்டம். அதன் பிறகு இந்தப் பிரபஞ்சத்தோடு முடிவற்ற பகுதியாக நீங்கள் மாறும் பிரம்ம லோகத்திற்கு வருகிறீர்கள். பிரம்மலோகத்தைத் தவிர வேறு எந்த உலகிலிருந்தும் நீங்கள் பெளதிக உலகிற்கு வரலாம். மற்ற எல்லா உலகங்களும் கொஞ்சம் புலன்களால் ஆன மேலுறையைக் கொண்டுள்ளன; இம்மேலுறையால் ஈர்க்கப்படும் சக்திகள் மேன்மேலும் செறிவானவையும், மெய்யானவையுமான வெளிப்பாட்டு நிலைகளுக்கு உருமாறி, இறுதியில் இந்த உலகில் மறுபிறப்பை அடைகின்றன.
இன்னொரு கோட்பாடு, குறிப்பாக புத்தமதவாதிகளால் கைக்கொள்ளப்பட்டு வருவது. இதன்படி, ஒரு நபர் இறக்கும்போது, அவர் இந்தப் பூமியிலேயே திரிந்து துன்பம் விளைவிக்காமல் இருக்கும் பொருட்டு இங்கேயே இருக்கும் ஒருவர், அடுத்த அடுத்த உலகுக்கு அவர் போக உதவ வேண்டும். இந்தத் தளத்தில் புத்தமதவாதிகள் ஒரு விரிவான அமைப்பு முறையை வளர்த்தெடுத்த அளவுக்கு இந்துக்கள் செய்யவில்லை. பெரும்பான்மையான இந்துக்கள் வேதாந்தத்துக்கு உடன்படுகிறவர்கள். வேதாந்தத்தின்படி, பெயர் மற்றும் தோற்றத்தின் உலகம் மாயையானது. வாழ்வும், மரணமும் புலன்கள் சார்ந்த அந்தஸ்தை மட்டுமே உடையவை; அவற்றை உண்மை என்று கருதக்கூடாது. இப்படியாக இந்துக்கள் மரணம் தொடர்பான இயலை கொன்றுவிட்டார்கள்.
புத்தமதவாதிகள் இந்தியாவின் மிக உயரிய மனோதத்துவவாதிகள். அவர்கள் மனத்தை பெளதீக உடலைவிட மேலான ஒன்றாகக் கருதினார்கள். அவர்கள் பல படைப்பு மூலவர்களையும், அதீத தெய்வ நிலையுடைய உயிர்களையும் உண்டாக்கினார்கள்; இவர்களால் பறக்கவும், வளிமண்டலத்தில் ஒளிந்து வாழவும், அல்லது ஒரு பெளதீக உடலில் வெளிப்பட்டு மீண்டும் தூய சக்திக்குத் திரும்பவும் முடியும். கிறிஸ்துவம் அல்லது இஸ்லாம் போன்ற, வருவதை உணர்த்தும் மதங்களின் கோட்பாடுகளிலிருந்து புத்தமதத்தின் கோட்பாடுகள் மிகுந்த வேறுபாடு கொண்டவை. ‘ஒரு கிறிஸ்துவராகவோ அல்லது முஸ்லீமாகவோ பிறப்பது மிகவும் சலிப்பூட்டக்கூடியது’ என்று நினைக்கிறேன். மரணத்துக்குப்பின் இறுதித் தீர்ப்பு சொல்லும் நாளுக்காக நீங்கள் முடிவற்றுக் காத்திருக்க வேண்டும். கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளில் இறந்தவர்கள் எல்லாம் இன்னும் தீர்ப்புக்கு அழைக்கப்படவே இல்லை.
புத்தமதக் கருத்துக்கள் அன்றி, மரணம் மற்றும் விதி தொடர்பான ஆய்வியலுக்கு, இந்தியாவின் பெரும் பங்களிப்பு மரணத்துக்கும் காலத்துக்கும் இடையே உள்ள தொடர்பு பற்றியது. மரணத்தின் கடவுள் ‘காலன்’ என்று அழைக்கப்படுகிறார். காலன் என்றால், காலத்தோடு தொடர்புடையவன். காலம் கொல்கிறது. ஆனால், இந்தியக் காலம் உண்மையில் கொல்வதில்லை, அது நிறுத்தித்தான் வைக்கிறது. அது வாழ்க்கைக்கு ஒரு கால்புள்ளியையோ அல்லது அரைப்புள்ளியையோதான் வைக்கிறது. ஒருபோதும் முற்றுப்புள்ளியை வைப்பதில்லை. காலனுக்கு இன்னொரு பெயர் ‘எமன்’ யமா என்றால், இடைநிறுத்தம் என்று பொருள். நாம் இப்போது செயல்பட்டுக்கொண்டிருக்கும் விதத்திலிருந்து ஓர் இடைநிறுத்தம் கொடுக்கும் ஒன்றாக மரணம் கருதப்படுகிறது. இந்த இடை நிறுத்தம் ஒவ்வொரு இரவிலும் கூட நமக்குக் கொடுக்கப்படுகிறது. ஒவ்வொரு இரவிலும் நாம் மரணத்தை சுவைக்கிறோம். எந்தச் செயலிலிருந்து நமக்கு ஓர் இடைநிறுத்தம் ஏற்பட்டாலும், எமன் நம்முடன் இருக்கிறான். எமனைப் பார்த்து நாம் பயப்படத் தேவையில்லை; அவன் நம்முடைய நிலையான தோழன். நாம் பேசும்போதுகூட இடைநிறுத்தங்கள் உண்டாகின்றன. நம்மைப் பற்றி அக்கறைகொண்ட, நமக்குப் போதுமான ஓய்வு தருகிற ‘அற்புத நண்பன்’ எமன். இல்லையென்றால், பிரபஞ்ச இயங்கு சக்தியின் குறைபாடு நம்மை வெகுகாலத்துக்கு முன்பே அழித்திருக்கும். உலகம், முழுக்குழப்பத்துக்கு கீழிறிங்கிப் போகாமல் காப்பாற்றும் இயங்கு சக்தியே எமன்.