குருகுலம் வெளியிட்டு வந்த இதழில் ‘பாலர் உலகம்’ என்ற ஒரு பகுதியை ஆரம்பித்தேன். நேரம் கிடைக்கும்போதெல்லாம் பலவகைப்பட்ட ஊர்களுக்கும் சென்று சிறுவர் குழுக்களை ஒழுங்கமைத்தேன். ஒவ்வொரு குழுவைப் பற்றிய அறிக்கைகளை வெளியிடுவதன் மூலம் குழந்தைகளுடன் தொடர்பை விடாமல் இருந்தேன்.
1954 வாக்கில் என்னோடு தொடர்பு வைத்திருந்த சிலர் இன்னும் என்னுடைய நெருங்கிய தோழர்களாக இருக்கிறார்கள். அவர்களுடைய வளர்ச்சி, கல்வி, திருமணம், பணி, பிறகு அவர்களின் குழந்தைகள் என்று எல்லாவற்றையும் பார்த்திருக்கிறேன். நான் என்னுடைய குடும்பத்துடன் நெருங்கிய தொடர்பு வைத்திருக்கவில்லை என்றாலுங்கூட குருகுலத்துடன் என்னால் தொடர்பு கொண்ட குடும்பங்கள் எனக்கு ஒரு வகையான ஒருமை உணர்வைக் கொடுத்தன. அவர்கள் இப்போது உலகம் முழுக்க இருக்கிறார்கள். ஆரம்பத்தில் மனிதக்குடும்பம் என்பது ஒரு லட்சியக் கனவாகத்தான் இருந்தது. இப்போது அது சாதிக்கப்பட்டுவிட்ட ஒரு நடைமுறையாக ஆகிவிட்டது.
நான் வர்க்கலையில் இருந்தபோது சிவகிரி உயர்நிலைப் பள்ளியிலிருந்து சிறுவர் சிறுமியர் பகல் உணவு இடைவேளையின்போது குருகுலத்துக்கு வந்து மாமரங்களின் நிழலில் உட்கார்ந்து சாப்பிட்டுவிட்டு ஓய்வெடுப்பார்கள். திரும்ப பள்ளி மணி அடிக்கும் வரை அவர்களுக்கு செய்வதற்கு ஏதுமில்லாததால் நான் அவர்களுக்குக் கதைகள் சொல்ல ஆரம்பித்தேன்.
வெகு விரைவில் அது ஒரு மகிழ்ச்சி தரும் நிகழ்வாக மாறியது. ஒவ்வொரு நாளும் அரைமணி நேரத்துக்கு குழந்தைகளை ஈர்க்கும் விதமாக ஒரு கதையை நான் சொல்லவேண்டியிருந்தது. இதற்காக நான் க்ரிம் என்பவருடைய தேவதைக் கதைகளையும், பஞ்சதந்திரக் கதைகளையும், இந்தியக் கதைகளின் தொகுப்பான கதா சரித சாகரா என்ற புத்தகத்தையும் விக்ரமாதித்தன் கதைகளையும், ஆயிரத்து ஒரு இரவு அராபியக் கதைகளையும் மகாபாரதம் மற்றும் உபநிடதங்களிலிருந்து தேர்ந்தெடுத்த சில கதைகளையும் படித்தேன்.
கேரளாவின் அந்தப் பகுதியிலிருந்து உருவான சில மிகச் சிறந்த நாவலாசிரியர்களும் சிறுகதையாசிரியர்களும் சிவகிரி உயர்நிலைப் பள்ளியில் படித்து என்னிடம் தவறாமல் கதைகள் கேட்டு வந்ததாக பல வருடங்களுக்குப் பிறகு என்னிடம் சொன்னார்கள். எந்த நோக்கமும் இல்லாமல் நான் தெளித்த விதைகள் வளமான மண்ணில் விழுந்து நல்ல விளைச்சலைத் தந்ததை அறிந்து நான் பெரிதும் மகிழ்ச்சியடைந்தேன். ஒவ்வொரு மாதமும் குருகுல இதழில் சுவாரஸ்யமான கட்டுரைகளையும், கவிதைகளையும் வெளியிடவேண்டி இருந்ததால் எனக்கே அது ஒரு நல்ல கல்விப் பயிற்சியாக இருந்தது.
ராமகிருஷ்ண பரமஹம்சரின் போதனைகள் என்மீது உண்டாக்கிய செல்வாக்காலும் இந்திய ஒழுக்கப்பண்பும் ஆன்மீகமும் ஏற்படுத்திய தாக்கத்தாலும் பிரம்மசர்யம் சன்னியாசிகளின் புனிதக் கட்டுப்பாடு என்று நான் கருதி வந்தேன். அதனாலேயே பெண்களுடன் பழகுவதைத் தவிர்த்துவிட்டு எப்போதும் குழந்தைகள் மத்தியில் இருப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தேன்.
என்னுடைய நேர்மையையும். நோக்கத்தையும் சந்தேகிக்கும் விதமாக எழும் கற்பனையான ஆதாரமற்ற வம்புப் பேச்சுகூட என்னைப் பல நாட்களுக்கு வருத்தி நிம்மதி இழக்கச் செய்துவிடும். கழுவி, துடைக்க என்று பக்கத்துப் பகுதியிலிருந்து நான்கு பெண்கள் குருகுலத்துக்கு வந்து கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒரு பெண்ணைப் பற்றி யாரோ ஒருவர் ஒரு கதையைக் கிளப்பினார். அம்மாதிரி விஷயங்களில் எளிதில் புண்பட்டுவிடும் உணர்ச்சி கொண்ட நான், குருகுலத்துக்கு அவர்களை வராமல் இருக்கச் செய்வதன் மூலம் சந்தேகத்துக்கு இடம் அளிக்காமல் இருக்கலாம் என்று முடிவு செய்தேன்.
ஊட்டியிலிருந்து வந்த நடராஜ குரு, குருகுலத்துக்கு பையன்கள் மட்டும் வந்துகொண்டிருப்பதையும், ஒரு பெண்கூட கண்ணில் படாததையும் பார்த்துவிட்டு, “ஏன் பெண்கள் வருவதில்லை?” என்று என்னைக் கேட்டார். பெண்கள் குருகுலத்துக்கு வருவதைப் புரிந்து கொள்ளும் அளவுக்கு அக்கம்பக்கத்திலிருப்பவர்களுக்கு பக்குவம் இல்லையென்றும் அதனால் பெண்கள் யாரும் குருகுலத்துக்கு வரக்கூடாது என்று தடை விதித்துள்ளேன் என்றும் அவரிடம் சொன்னேன்.
குரு சொன்னார், “மக்கள் தொகையில் பாதிப்பேர் பெண்கள். இங்கு வருவதற்கு ஆண்களுக்கு எவ்வளவு உரிமை இருக்கிறதோ அந்த அளவு பெண்களுக்கும் இருக்கிறது.” பிறகு, நம் உடம்புக்கு என்ன நேர்கிறது என்பதைப் பற்றியோ, புத்தகங்களில் என்ன எழுதப்பட்டிருக்கிறது என்பதைப் பற்றியோ, பிறருடைய வம்புப் பேச்சு பற்றியோ பொருட்படுத்தவேண்டாம் என்று என்னைக் கேட்டுக்கொண்டார்.
வம்புப் பேச்சுக்கு ஆளான பெண்ணைக் கூட்டி வரச்சொன்னார். அந்தப் பெண்ணிடம் குரு சொன்னார், “இந்த உலகம் ஆண்கள் தங்கள் செளகரியத்துக்காக உருவாக்கிக்கொண்ட ஒன்று. இந்த உலகத்தில் பெண்கள் பலவகையான ஒடுக்குமுறைகளுக்கும், துன்புறுத்தல்களுக்கும் ஆளாகிறார்கள்.” ஒரு குரு என்ற முறையிலும், தந்தை ஸ்தானத்தில் இருந்ததாலும், அந்தப் பெண் தன்னுடைய கெளரவத்தைக் காப்பாற்றிக் கொள்வதற்காக நல்லதும் அழகானதுமான பொய்களைச் சொல்ல அவளுக்கு அனுமதி கொடுத்தார். “உண்மையைக் காதுகொடுத்துக் கேட்கவோ, அல்லது இயல்பான உறவுகளை மரியாதையுடன் பார்க்கவோ தைரியம் இல்லாத கோழைகளும் பூதங்களும்தான் ஆண்கள்.”
பொய்கள் சொல்ல பெண்களுக்கு உரிமை உண்டு என்று குரு சொன்னதைக் கேட்க எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. பிறகு குரு என்னிடம் சொன்னார், “இந்தப் பெண்கள் அவர்கள் குடும்பங்களுக்குப் போகும்போது மனைவிகளாகவோ அல்லது அம்மாக்களாகவோ இருக்கப் போகிறவர்கள். குடும்பம் என்பது பலவிதமான மனோபாவங்களும், மதிப்பீடுகளும் உடையவர்களால் ஆன ஒன்று. குடும்ப உறுப்பினர்களுக்குள்ளேயே சிலர் சாதாரணத்தை மீறியும் சிலர் சாதாரணத்துக்குக் கீழுமாக இருப்பார்கள். குடும்ப இணக்கத்தைப் பேண மனைவியோ அல்லது அம்மாவோ பல பொய்களைச் சொல்ல வேண்டும். அதன் விளைவாக, கொடுங்கோன்மை நிரம்பிய ஒரு தந்தை தன் மகனையோ அல்லது மகளையோ கொல்வதும், சந்தேகம் கொண்ட ஒரு கணவன் குடும்பத்தை விட்டு வெளியேறுவதும் நிகழாமல் தடுக்கப்படலாம். கோபம், பொறாமை, பழிவாங்கல் ஆகியவற்றிலிருந்து குடும்ப உறுப்பினர்களை நீங்கியிருக்கச் செய்வது ஒரு அம்மா அல்லது மனைவியின் கடமை.” ஒரு புத்திசாலியான பெண் சரியான முறையில் பயன்படுத்தும் ஒரு ஆக்கபூர்வமான பொய்யே குரு பரிந்துரைத்த தீர்வு. இவ்வாறாக ஆண்களும் பெண்களும் கூடும் இடமாக குருகுலம் மீண்டும் மாறியது.
பாலியல் விவகாரங்களில் எனக்கிருந்த சமநிலையற்ற நோக்கைக் கண்டுகொள்ள இந்தச் சம்பவம் குருவுக்கு உதவியது. குருவுடன் சேர்ந்து ஒரு வீட்டுக்குப் போனேன். அந்த வீட்டின் கூடத்தில் நிறையப் பெண்கள் இருந்தார்கள். குருவைப் பார்ப்பதற்காகவே முக்கியமாக அவர்கள் கூடியிருந்தார்கள். எனவே நான் தனியாக வெளியே உட்கார்ந்துவிட்டேன். நான் கூடத்திற்கு வராததை குரு கவனித்துவிட்டார். அவரே தாழ்வாரத்துக்கு வந்து என் கையைப் பிடித்து, அந்தப் பெண்கள் பகட்டாகச் சிரித்துக் கொண்டிருந்த அறைக்குள் இட்டுச் சென்றார். அவர்கள் ஒவ்வொருவராக தங்களுடைய பெயரைச் சொல்லி என்னிடம் கைகுலுக்கி அறிமுகம் செய்துகொள்ளச் சொன்னார். அவர்களைத் தொடுவது எனக்கு பயத்தையும் நடுக்கத்தையும் கொடுத்தது. பெரும்பாலான கைகள் வியர்வையால் சில்லென்றிருந்ததை கவனித்தேன். அவர்களுடைய கண்களைப் பார்க்கும் அளவுக்கு எனக்குத் துணிச்சல் இல்லை. சிரிப்பலைகளும் தடுமாற்றமும் அங்கிருந்தன.
பிறகு குரு ஒரு நாற்காலியில் என்னை உட்காரச் சொல்லி அந்தப் பெண்களிடம் பேசச் சொன்னார். அவர்களில் சிலர் என்னருகே நெருங்கி வந்து உட்கார்ந்தார்கள். என்மீது அவர்களுக்கு ஈர்ப்பு உண்டாகியிருந்ததையும் கவனித்தேன். அவர்கள் பக்கம் திரும்பிய குரு, “அவன் இளைஞன். அவனை நம்பாதீர்கள். உங்களைக் கூட்டிக்கொண்டு ஓடினாலும் ஓடிவிடுவான்” என்று சொன்னார். அவர் சொன்னது மீண்டும் சிரிப்பை உண்டாக்கியது. ஆனால் அப்படியான சங்கடமான நகைச்சுவைப் பேச்சுக்களை குரு பேசியது எனக்கு நயமற்றுத் தோன்றியது.
ராமகிருஷ்ணா மிஷனைச் சார்ந்த ஒரு சுவாமியைப் பற்றிய ஒரு கதையை குரு எனக்கு பிறகு சொன்னார். அந்த சுவாமி இளமையும் அழகும் நிரம்பியவராம். பெண்களை முற்றாகத் தவிர்த்து வாழ்ந்து வந்தவராம். அவர் ஒருமுறை பாரீசில் ரயிலில் பிரயாணம் செய்து கொண்டிருந்தபோது அவருடைய அழகால் ஈர்க்கப்பட்ட ஒரு பெண் திடீரென்று அவரை அணைத்து முத்தமிட்டுவிட்டாளாம். அந்தச் சங்கடமும் அதிர்ச்சியும் சுவாமியால் தாங்கமுடியாததாக இருந்ததால் அவருக்கு அந்த இடத்தில் பக்கவாதம் ஏற்பட்டிருக்கிறது. அவரை பிறகு இந்தியாவுக்குக் கொண்டுவர வேண்டியிருந்ததாம்.
பக்குவமில்லாத பிரம்மசரியம் வெடித்துவிடும் கொதிகலனைப் போல ஆகிவிடும் என்று அங்கிருந்த இளவயதினரை குரு எச்சரித்தார். இளவயதினர் எவ்வாறு தங்களுடைய பாலியல் உணர்ச்சிகளை தங்களுடைய அறவொழுக்கத்தை மீறாமலேயே வெளியிடலாம் என்பதை விளக்குவது அவருக்கு சிரமமாகவே இருந்தது.
இந்தச் சிக்கலான விஷயத்தை நான் பரிசீலிப்பதற்கு அது ஒரு தொடக்கமாக இருந்தது. ஃப்ராய்டு மற்றும் ஹேவ்லாக் எல்லீஸ் ஆகியோரின் பாலியல் கோட்பாடுகளைக் கற்கச் சொல்லி குரு என்னை அறிவுறுத்தினார். அவற்றை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லையென்றாலும் ஹேவ்லாக் எல்லீஸைப் படிக்கத் தொடங்கியபோது ஒவ்வொரு அத்தியாயமும் எனக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது.
என்னுடைய வளர் இளம் பருவத்திலும், இளமையிலும் இந்திய சமூகத்தின் மூலமாக நான் பெற்றதை இப்போது ஆராயும்போது பாலியல் ஒடுக்குமுறையைத் தன்னுள்ளே கொண்டிருந்த ஒரு நோயுற்ற சமூகம் அது என்பதை நான் உணர்கிறேன். பாலியல் என்பது ஒருவகை தீட்டு என்று கருதப்பட்டதால் பாலியல் கல்வியே தரப்படவில்லை. இயற்கையான உணர்ச்சிகளை நம் இளமைக்காலத்தின் மிக அழகான அனுபவங்களாக மாற்றி எப்படி அவற்றை உயர்வுபடுத்திக் கொள்ளலாம் என்பதைத் தெரிந்துகொள்ள இளைஞர்களுக்கு அப்போது வழியே இல்லை. கொஞசம் கொஞ்சமாக இந்த சிரமங்களைக் கடப்பதற்கு குரு எப்படி எனக்கு உதவினார் என்பதை நினைக்கும்போது வார்த்தைகளால் விவரிக்கமுடியாத பெரும் நன்றியுணர்வு என் நெஞ்சில் நிறைகிறது.
– தமிழில் ஆர். சிவகுமார்
(யுனைடெட் ரைட்டர்ஸ் வெளீயீடான ‘அனுபவங்கள் அறிதல்கள்’ புத்தகத்திலிருந்து)