யதி சென்னை விவேகானந்தா கல்லூரியில்
தத்துவ ஆசிரியராக நியமிக்கப்பட்ட பிறகு
கல்லூரி விடுதியில்
அவருக்கு ஏற்பட்ட அனுபவங்கள்:
விவேகானந்தா கல்லூரி விடுதியின் தலைவராக இருந்த சுவாமி நிஷ்ரேயசானந்தா துணிச்சலான மனநிலையும், உயரிய கொள்கைகளும் உடையவர். ஆங்கிலம், சம்ஸ்கிருதம், மலையாளம் மற்றும் ஃபிரெஞ்ச் ஆகிய மொழிகளில் ஆழ்ந்த புலமை உடையவர். எல்லோருக்கும் உதவும் அன்பான நண்பர். அவருடைய உடலும் மனமும் மிகுந்த ஒழுங்குக்கு உட்பட்டிருந்ததால் யோகா மற்றும் இயற்கை மருத்துவத்தைக் கற்றுத் தருவதில் அவர் நம்பிக்கைக்குரிய ஆசிரியராக இருந்தார். என்னை அறிந்துகொண்டதில் மிகுந்த மகிழ்ச்சியடைந்த அவர் என்னை சக ஊழியராகப் பெற்றதில் திருப்தி அடைந்தார். ஆசிரியர்களும் மாணவர்களும் அடங்கிய ஒரு தொண்டர் குழு மூலம் ராமகிருஷ்ண ஆசிரமத்துக்கு அதிகபட்ச சேவையை அளிக்க விரும்பினார்.
எனக்குப் பிறகு சில நாட்களில் கல்லூரியின் தமிழ்த்துறையில் ராமன் என்பவர் விரிவுரையாளராக நியமிக்கப்பட்டார். தமிழ் இலக்கியத்தில் அபாரத் தேர்ச்சி கொண்ட அவர் என்னுடன் நட்புகொண்டு விடுதிக்கு வர ஆரம்பித்தார். அவரை சுவாமிஜிக்கு அறிமுகப்படுத்தினேன். என்னை விடுதியின் காப்பாளராகவும் அவரைத் துணைக் காப்பாளராகவும் சுவாமிஜி நியமித்தார்.
விடுதி மாணவர்களிடையே காட்டப்பட்ட ஜாதி வேறுபாட்டைக் கண்டு ராமன் மிகுந்த மனவருத்தம் கொண்டார். அரசின் நிதி உதவி பெறும் விடுதிகள் இருபது சதவீதம் ஹரிஜன மாணவர்களைச் சேர்க்கவேண்டும் என்பது அரசின் உத்தரவாக இருந்ததால் நிர்வாகம் இருபது சத ஹரிஜன மாணவர்களைச் சேர்க்கவேண்டிய கட்டாயத்துக்கு உள்ளானது. அதே சமயம் விடுதியில் அந்த மாணவர்கள் இருப்பது சகித்துக் கொள்ளப்படவில்லை.
நிஷ்ரேயசானந்தா ஒரு பிராமணர் அல்லாத சுவாமிஜி. வேதத்தைப் பாராயணம் செய்வதைக் கேட்பதனின்றும் பிராமணர்களால் அவர் தடுக்கப்பட்டிருந்த கசப்பான அனுபவங்கள் அவருக்கிருந்தன. வேத பாராயணத்தை எல்லா மாணவர்களுக்கும் சொல்லித்தருவதை நடைமுறைப்படுத்தும் அதிகாரம் உள்ள நிலையில் இப்போது அவர் இருந்ததால், வகுப்புகள் தொடங்கும் முன்பாக வேத உபநிடத பாராயணத்தையும் பயிற்றுவிக்க இரண்டு சாஸ்திரிகளை நியமித்தார்.
வேதமந்திரங்களை பிராமணர் அல்லாதவர்கள் கற்பதற்கு இருந்த காலங்காலமான தடையை இந்த ஏற்பாடு புதுப்பித்து எழுப்பியது. மாணவர்களிடையே பிராமணர் அல்லாதவர்கள் இருந்தது மட்டுமல்லாமல் சில ஹரிஜன மாணவர்களும் இருப்பது தெரிய வந்ததும் சாஸ்திரிகள் சொல்லித்தர மறுத்துவிட்டனர். பிராமணர்களின் எதிப்புகளைக் கண்டு மனந்தளராத சுவாமிஜி தானே உபநிடதங்களை எங்களுக்கு நேரிடையாகச் சொல்லித்தரத் தொடங்கினார். சில நாட்களுக்குப் பிறகு சாஸ்திரிகள் திரும்பி வந்தனர்.
வேத பாரயணத்தைக் கற்றுக்கொள்ள எனக்கு அது மிகப் பெரிய வாய்ப்பாக அமைந்தது. பிறகு வர்க்கலை குருகுலத்தில் இளைஞர்களுக்கு உபநிடதங்களைக் கற்றுக்கொடுத்தேன். குருகுலத்தின் எல்லாக் கிளைகளிலும் வேதபாராயண முறை இன்றும் வழக்கிலுள்ளது. குருகுலம் பெற்ற இந்தப் பரிமாணத்துக்கு நாம் சுவாமி நிஷ்ரேயசானந்தாவுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளோம்.
பிராமண ஆசிரியர்களும் பிராமண மாணவர்களும் ஹரிஜன மாணவர்கள் மீது காட்டிய துவேஷத்தைக் கண்டு சுவாமிஜி வருந்தினார். பிராமண மாணவர்களும், ஹரிஜன மற்றும் பிராமணர் அல்லாத மாணவர்களும் இணக்கமாகப் பழக ஏதுவாக இருக்கும்பொருட்டு அவர்களுடைய படுக்கைகளைக் கலந்து போடச் சொல்லி சுவாமிஜி என்னைக் கேட்டுக் கொண்டார். மாணவர்களை ஒழுங்குக்குக் கொண்டுவரும் ஒரு முயற்சியாக நான் அதைச் செய்தேன். பத்து நாட்களில் விடுதியிலிருந்து ஹரிஜனப் பிரிவு மறைந்துபோனது.
நிர்வாகத்துக்குள் இது மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியது. சுவாமிக்கு எதிராக முடிவு எடுக்க நிர்வாகக் குழு பலமுறை கூடியது. இறுதியில் கல்கத்தாவிலுள்ள ராமகிருஷ்ணா மிஷனின் தலைமையகத்துக்கு முறையீடு செய்தார்கள். சுவாமி அப்போதைய பதவியிலிருந்து மாற்றப்பட்டு ஆப்ரிக்காவில் ஒரு புது மையம் தொடங்குவதற்காக அனுப்பப்பட்டார். அவருடைய பணியைச் செய்ய என்னையாவது அங்கே தொடர அனுமதித்தார்களே என்று அவர் திருப்தியடைந்தார்.
நான் விடுதியில் தங்கியிருந்தபோது என்னைப் பார்க்க நடராஜ குரு இரண்டு தடவை வந்தார். அவருடைய வகுப்புத் தோழர்கள் சிலர் அங்கே ஆசிரியர்களாக இருந்தார்கள். அவரை வரவேற்பதில் அந்தப் பேராசிரியர்கள் வெளிப்படையாக நயமாக நடந்துகொண்டாலும், அவருடைய நோக்கம் குறித்து அவர்கள் மனதிற்குள் பயந்து போயிருந்தார்கள். பிராமணர்களின் எதிரியாக நியாயமற்ற வகையில் அவர் பார்க்கப்பட்டார். அவர் எந்தப் பிரிவினருக்கும் எதிரி அல்ல. அதேசமயம், பிறரை விட தான் உயர்ந்தவர் என்று வீறாப்பாகக் கருதிக் கொள்ளும் யாரையும் அவர் சகித்துக்கொள்ள மாட்டார்.
சங்கரரைப் பற்றியும் அத்வைத வேதாந்தத்தைப் பற்றியும் அவருடைய முதல் சொற்பொழிவு அமைந்தது. இந்தப் பேச்சு, என்னுடைய பேராசிரியர் சங்கரநாராயணாவுடன் ஒரு பெரும் மோதலுக்கு இட்டுச் சென்றது. கோபம் கொள்ளாமலும், வருத்தம் தொனிக்கும் குரலிலும் என்னுடைய பேராசிரியர் அப்போதைக்குப் பேசினாலும் நடராஜ குரு போன பிறகு என்மீது அவருடைய கோபத்தைக் காட்டுவார் என்பது தெரிந்ததால் நான் விடுதியைவிட்டு வெளியேறுவது புத்திசாலித்தனம் என முடிவு செய்தேன்.
அப்போது சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக ராஜாஜி என்று பரவலாக அழைக்கப்படும் சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி இருந்தார். காந்திக்கு அடுத்து அவர்தான் இந்தியாவில் இரண்டாவது பெரிய ஆன்மீகத் தலைவர் என அறியப்பட்டவர். எங்கள் கல்லூரிக்கு வந்த அவர், பேராசிரியர்கள் தங்களுடைய ஆடம்பரமான இருப்பிடங்களை விட்டு நீங்கி கீழ்நிலையில் வாழும் புறக்கணிக்கப்பட்ட மக்களின் குடிசைகளுக்குச் சென்று சேவை செய்யவேண்டும் என்று தூண்டும் விதமாகப் பேசினார்.
கல்லூரி விடுதியை விட்டு நீங்குவதற்கு அதை ஒரு நல்ல சந்தர்ப்பமாக எடுத்துக்கொண்டேன். அடையாறுக்கு அருகில் சென்னையில் மிக மோசமான சேரிகளில் ஒன்றில் இரண்டு ரூபாய் வாடகைக்கு ஒரு குடிசையை அமர்த்திக்கொண்டேன். அது ஒரு தாழ்வான, சகதி நிரம்பிய, மலேரியாவை உண்டுபண்ணும் கொசுக்கள் மொய்த்துக்கொண்டிருந்த இடம். நிறையக் குடிசைகள் நெருக்கமாக இருந்தன. சேரியின் நடுவில் என்னுடைய குடிசை இருந்தது. அந்தச் சூழலுக்கு ஈடுகொடுத்து வாழ்வது ஒரு பெரிய சவாலாக இருந்தது. ஒவ்வொரு நாள் இரவும் யாராவது ஒருவர் காலராவால் இறந்துகொண்டிருந்தார்கள். டாக்டர் ஒருவரை அழைத்துவர நான் முயன்றேன். ஆனால் பறையர்களின் சேரிக்கு எந்த டாக்டரும் வரத் தயாராக இல்லை. இறந்துகொண்டிருந்தவர்களின் அருகில் இப்படியாக கையாலாகாதவனாக நிற்க வேண்டியிருந்தது.
சேரி மக்களின் ஒரே ஆறுதல் சாராயம்தான். பெண்களின் நடத்தையும் சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை. மிட்டாய் மூலம் குழந்தைகளை ஈர்த்து அவர்களுக்கு மாலைநேர பிரார்த்தனைக் கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்தேன். கொஞ்சம் கொஞ்சமாக சேரியில் ஒழுங்குணர்வையும், அமைதியின்பால் விருப்பத்தையும் உண்டாக்கினேன். கல்லூரியிலிருந்து நான் திரும்பியபோதெல்லாம் கூச்சலால் நிரம்பியிருக்கும் சேரி திடீரென்று அமைதியாகிவிடும். சச்சரவு இல்லாமல் அவர்கள் அமைதியாக இருக்க என்னுடைய வருகை ஒரு தூண்டுதலாக இருந்தது.
நல்ல குடிநீரை அவர்களுக்கு வழங்கினாலொழிய காலராவை முற்றிலுமாக நிறுத்தமுடியாது என்பதைத் தெரிந்துகொண்டேன். அதைச் செய்ய நகராட்சியின் குடிநீர்க்குழாய் கோயில் நிலத்தின் குறுக்காக வரவேண்டியிருந்தது. பறைச்சேரி மக்களின் உபயோகத்திற்காக குடிநீர்க் குழாய் தங்கள் நிலத்தின் வழியாகப் போவதை அனுமதிக்க கோயில் நிர்வாகிகள் மறுத்துவிட்டார்கள்.
புனிதராக மதிக்கப்பட்ட முதலமைச்சர் ராஜாஜியிடம் போனேன். அவருடைய உணர்வுகளை மதிக்கத்தான் கல்லூரி விடுதியை விட்டு நீங்கி சேவை செய்வதற்காக நான் சேரிக்குப் போனதாக அவரிடம் சொன்னேன். ஒரு பிரஜை என்ற முறையிலும் முதல் அமைச்சர் என்ற முறையிலும் ஏழை மக்களுக்கு நல்ல தண்ணீர் வழங்குவது அவருடைய பொறுப்பு என்பதைத்தான் நான் வேறுவிதமாக அப்படி வலியுறுத்திச் சொன்னேன். என்னை முகத்துக்கு நேராகப் பார்த்துவிட்டு மழுப்பாமல் நேரிடையாகச் சொன்னார், “மேடையில் ஒரு அரசியல்வாதி ஆவேசமாகப் பேசுவதை ஒரு முட்டாள்தான் நம்புவான். இன்றைக்கே சேரியைவிட்டு விடுதிக்குத் திரும்பிப் போய்விடு. இல்லையென்றால் காலராவுக்கு அடுத்த இரையாக நீதான் இருப்பாய்.” ராஜாஜியின் ஆளுமையில் ஒரு புனிதரும் ஒரு அரசியல்வாதியும் ஒன்றிணைந்து இருக்கமுடியும் என்று நான் நம்பியது எவ்வளவு முட்டாள்தனம் என்பதை உணர்ந்துகொண்டேன்.
விடுதிக்குத் திரும்பிப் போக எனக்கு விருப்பமில்லை. கல்லூரிக்கு அருகிலேயே ஒரு அறையை வாடகைக்கு எடுத்துத் தங்கியதோடு என்னுடைய உணவையும் நானே சமைத்துக் கொண்டேன். நடராஜ குரு மீண்டும் ஒருமுறை வந்தபோது அவரை வரவேற்று உபசரிக்க எனக்கென்று ஓர் இடம் இருந்தது நல்லதாகப் போயிற்று. கல்லூரியில் கூட்டங்களை ஏற்பாடு செய்வதற்குப் பதிலாக அப்போது சென்னை மாகாணத்தின் மின்சாரத் துறை தலைமைப் பொறியாளராக இருந்த என்னுடைய நண்பரான என்.சி. குமாரனின் வீட்டில் கூடினோம். கூட்டங்களுக்கு வந்தவர்களில் ஒருவரான டாக்டர் ராமகிருஷ்ணம்மா என்ற பெண்மணி நிறையக் கேள்விகளையும், உண்மையை அறியும் தீவிர வேட்கையும் கொண்டிருந்தார். அவர் நடராஜ குருவோடு நீண்ட சர்ச்சைகளில் ஈடுபட்டார். அப்படியாகத்தான் அவர் தன்னுடைய புகழ்பெற்ற பகவத் கீதை பற்றிய விளக்கத்தை எழுதத் தூண்டப்பட்டார்.